சிறுகதை 2.

ஆழத்துயர் மீள வேண்டும்....

                 அன்று ஒருநாள் மாலைப் பொழுதின் அழகை ரசிப்பதற்காக தனது வீட்டிற்கு முன்னே கிடந்த மதகின் மீது ஏறி உட்கார்ந்தாள் வெண்ணிலா. கதிரவன் செக்கச் செவேலேனக் காட்சியளித்தது. அந்த வானத்தின் செந்நிறம் அவள் மீது தெறித்து இந்த வெண்ணிலாவையும் செந்நிறமாகக் காட்டியது. புள்ளினங்களின் பல்லின ஒலிகளும் அவன் காதுகளில் அமுத கானமாக ஒலித்தது. இயற்கைக் காட்சியை ரசிப்பதென்றால் வெண்ணிலாவிற்கு கொள்ளை ஆசை. வானமகள் சிரிக்க தினமும் வான் நிலாவை ரசிப்பாள். இயற்கைக் காட்சியாயை விரும்பும் இவளுக்கு இவளது இல்லமும் இயற்கைக் காட்சியின் நடுவே அமைந்திருப்பது இவளுக்கு இரு மடங்கு சந்தோசத்தைக் கொடுக்கும். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் ஒன்றுதான் இவளது ஊரான வன்னேரிக்குளமும். சிறிய சிராமமாக இருந்தாலும் இயற்கை அழகைத் தன்னகத்தே கொண்ட எழில் மிடு கிராமம் அது. அடக்கமான சிறிய அவள் இல்லத்திற்கு எதிரே விருந்தினர் வந்தால் உட்கார வைத்து உபசரிப்பதற்கென அழகிய தலைவாசல். அதன் வாசலருகே கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும் திருவாத்தி மரம். வீட்டிற்கு முன்னே வீதி. வீதியைத் தாண்டியதும் அவர்களது நெல்வயல். வயலுக்குப் பின்னால் வற்றாது ஓடும் ஆறு. ஆற்றுக்குப் பின்னால் பச்சைப் பசேலெனக் காட்சி தரும் சிறிய பற்றைகளைக் கொண்ட காடு. இயற்கைக் காட்சியை விரும்புபவர்களுக்கு வெண்ணிலாவின் இல்லம் ஒரு சொர்க்கமாகத்தான் காட்சி தரும். இந்த இயற்கையின் நடுவே வாழ்வதனால்தானோ என்னவோ வெண்ணிலாவால் அவள் உள்ளத்துள் மறைந்து கிடக்கும் அந்தக் கொடூர சம்பவங்களையும் வேதனைகளையும் சிறிதளவாவது மறந்திருக்க முடிகிறது? ஆனாலும் அந்த துன்ப அலைகள் அவள் நெஞ்சில் வந்து இடையிடையே மோதும் போதெல்லாம் மூச்சுத் திணறிப் பேச்சின்றித் தனிமையில் தவிப்பாள்.


             வன்னேரிக்குளத்தில் வாழும் ஓரளவு வசதி படைத்த படித்த குடும்பங்களில் ஒன்றுதான் பொன்னம்பலத்தாரின் குடும்பமும். இவரது அன்பான அழகிய மனைவி பெயர் மங்கை. இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் இவர்களது கடைக் குட்டிதான் வெண்ணிலா. எல்லோரிடமிருந்தும் அளவற்ற செல்லம் இவளுக்குக் குறைவின்றிக் கிடைக்கும். செல்லப் பிள்ளையாக இருந்தாலும் மிகுந்த கெட்டிக்காரி. ஊக்கத்துடன் படித்து வந்த இவள் கல்விப் பொது சாதாரணதரப் பரீட்சையிலே சிறந்த பெறுபேறுகளைப் பெற்று ஏனைய மாணவர்களுக்கும் ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்தாள். உயர்தரப் படிப்பிற்காக கலைத்துறையைத் தேர்ந்தெடுத்தாள். மிகுந்த ஆர்வத்துடன் படித்து வந்த இவளுக்கு மேலும் உந்து சக்தியாக இருந்தாள் இவளது சகோதரி வான்மதி. உயர்தரப் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக் கழகம் புகுவதற்கான வாய்ப்புக் கிடைத்தும் நாட்டு நிலைமை சீரில்லாத காரணத்தால் அந்த வாய்ப்பை இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டவள்தான் வான்மதி. அந்தத் தாக்கம் அவள் நெஞ்சத்தை நெருடும்போதேல்லாம் தனது தங்கை வெண்ணிலாவிற்கேனும் அந்த வாய்ப்புக் கிட்ட வேண்டும் என்ற அவாவினால் அவளுக்கு பாடங்களைக் கற்றுக் கொடுப்பாள். பயமறியாத இளங்கன்றாகத் துள்ளித் திரிந்த இந்த வெண்ணிலாவின் வாழ்க்கையில்தான் எதிர்பாராத விதமாக பெரியதோர் திருப்பு முனை ஏற்பட்டது. திருப்புமுனை என்று கூறுவதை விட ஒரு விபத்தென்று கூறுவதே மிகப் பொருத்தமாக இருக்கும்.

                             1996ம் ஆண்டு கிளிநொச்சி இடப்பெயர்வின் போது அங்கிருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பை முன்னிட்டு கிராமப் புறங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள். அவ்வாறு இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் வன்னேரிக்குளத்திலும் வந்து தற்காலிகமாகக் குடியேறினார்கள். அவ்வாறு குடியேறிய குடும்பங்களில் ஒன்றுதான் நடேசரின் குடும்பமும். நடேசருக்கு நான்கு பிள்ளைகள். இவர்கள் பொன்னம்பலத்தாரின் அயலிலுள்ள அவரது உறவினன் வீட்டு காணியில் தற்காலிகமாக குடிசை ஒன்றை அமைத்து அதில் வசித்து வந்தார்கள். நாட்கள் பல நகர நடேசரின் குடும்பத்தினர் பொன்னம்பலத்தாரின் குடும்பத்தாருடம் மிக நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு பழகும் சமயத்தில்தான் நடேசரின் கடைசி மகன் முகுந்தனுக்கு வெண்ணிலா மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. வெண்ணிலா பாடசாலை சென்று வரும்போது இவர்களது இல்லத்தை தாண்டியே சென்று வருவது வழமை. அவள் தன் கண்களில் தோன்றும்போதெல்லாம் அவளைக் கண்ணிமைக்காது நோக்குவான். காலை ஏழு மணியிலிருந்தே தன் விட்டு  வாசலில் வெண்ணிலாவின் வருகைக்காய் காத்திக் கிடப்பான். அவனது அடிமனதில் அரும்பிய காதலைப் பற்றி யாரறிந்தார் அன்று?

            இவ்வாறு மாதங்கள் பல மறைந்து ஓடிச் சென்றன.. அன்றொருநாள் வெண்ணிலா பாடசாலைக்குச் செல்கையிலே அவளைப் பின் தொடர்ந்து அவளது பாடசாலை வரைச் சென்ற முகுந்தன் அவளை இடை மறித்து வெண்ணிலா "ஐ லவ் யு"என்று கூறி தன் காதலை அவளிடம் தெரிவித்தான்.அவனிடமிருந்து இதைச் சிறிதும் எதிர் பார்த்திராத வெண்ணிலாவிற்கு உச்சி முதல் உள்ளங்கால்வரை கிடுகிடுவென நடுங்கத் தொடங்கியது. பதிலேதும் கூறாமல் அவனை விட்டு விலகி துவிச்சக்கர வண்டியை மிக வேகமாக மிதித்தாள். தனது இல்லத்தை அடைந்தவளுக்கு வழமை போல் யாருடனும் பேசப் பிடிக்கவில்லை. ஆடை மாற்றி கால் முகம் கழுவிய பின்னர் தன் படுக்கை அறைக்குள் சென்று விட்டாள். இதை அவதானித்த தாய் மங்கை "பிள்ள வெண்ணிலா ஏன் படுத்துட்டாய்? சாப்பிடேல்லைய? பிள்ளைக்கு ஏதும் சுகமில்லைய? என்று தன் அன்பு வார்த்தைகளால் கொஞ்சிக் கதை கேட்டார். இல்லையம்மா பசிக்கேல்லை.  தலை வலிக்குது. கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளப் போறன் என்று கூறியவள் நடந்த சம்பவத்தை யாருக்கும் கூறாமல் மறைத்தாள். காரணம் தந்தை பொன்னம்பலம் மிகுந்த கண்டிப்பானவர். தனது பிள்ளைகள் தன் சொற்கேட்டு அடக்க ஒடுக்கமாக வாழ வேண்டும் என விரும்பும் ஒரு தந்தைதான் அவர். இது பற்றி தன் தந்தையுடம் கூறினால் ஏதும் விபரீதம் வந்து விடுமோ என்றுதான் அந்த பிஞ்சு உள்ளம் அன்று அஞ்சியது போலும்...

இவ்வாறே நாட்கள் பல நகரந்தன. முகுந்தனுடைய அட்டகாசம் குறைவதாகத் தெரியவில்லை. ஒருநாள் இரவு தன் தங்கைக்கு பாடங்கள் சொல்லிக் கொடுப்பதற்காக நாற்காலியில் உட்கார்ந்த வான்மதி ”வெண்ணிலா நானும் உன்ன கொஞ்ச நாளா பாத்துக்கொண்டு வாறன் உன்ர முகம் ஒரு மாதிரியா இருக்கு. உனக்கு என்ன பிரச்சன? என்னெண்டாலும் அக்காட்ட சொல்லம்மா” என்று அவள் கூறி முடிப்பதற்குள் தனது கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டு விம்மி விம்மி அழத்தொடங்கினாள் வெண்ணிலா. ”ஏனம்மா.... ஏன் அழுகிறாய்? பிள்ளைக்கு என்னாச்சு என்று பரபரப்புடன் கேட்டாள் வான்மதி. ”அக்கா எனக்கு ஒரு பிரச்சன. உங்களிட்ட சொல்ல பயமா இருக்கு” என்று இழுத்தாள். ”இல்ல இல்ல.. சொல்லு” என்று தங்கையின் நாடியைத் தனது வலதுகையால் துாக்கி பாசமுடன் பார்த்துக் கேட்டாள் அக்கா வான்மதி. ” நான் பள்ளிக்கூடம் போய் வரும்போது நடேசன் அங்கிளின்ர மகன் முகுந்தன் பின்னாலயும் முன்னாலயும் வந்து தான் என்னை லவ் பண்ணுறன் என்று சொன்னார்.” என்று இழுத்தாள்.. ”எட இதுக்கே அழுறாய் வேறொன்றுமில்லையே?” என்று தன் தங்கையைச் சமாளித்தபடி அவளது முதுகைத் தட்டினாள் வான்மதி.  ”அவன் தனக்கு உன்னில விருப்பம் உள்ளதை உனக்குச் சொல்லியிருக்கிறான். உனக்கு விருப்பமில்லையெண்டா பேசாமல் விடன். அதை விட்டிட்டு சும்மா ஏன் அழுறாய்?” எனக் கூறி தன் தங்கையின் மனதை அமைதியடையச் செய்ய முயன்றாள்.. இல்லயக்கா எனக்கு அவனை பார்க்க பயமாக இருக்கு” என்று மீண்டும் விம்மினாள். ”சரி நான் அவனோட கதைக்கிறன் நீ அழாத” என்று கூறியவள், பாடங்களைக் கற்பிக்கத் தொடங்கினாள். வெண்ணிலாவை ஏதோ சமாளித்தாலும் முகுந்தன் மீது அவளுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. ”அவன ஒருக்கா பாத்து இதப்பற்றி கதைக்கத்தான் வேணும்” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள். ஆனால் இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் இவர்கள் இருவருமே கூறவில்லை.



தொடரும்................