காட்சியும் கவிதையும்.

சில காட்சிகளைப் பார்த்து அவை பற்றி
என் எண்ணத்தில் தோன்றிய கருத்துக்களை இங்கே கவிதையாக்கியுள்ளேன். கண்டு களியுங்கள்!

...................

+
...................


...................

எங்கே நீ சொன்றாயோ..




அன்னமிரண்டு அன்பு கொண்டு
இதயத்தினால் இணைவதனை
பார்த்திருந்த மங்கை இவள்
பாடுகின்றாள் கவிதையொன்று!

தொடர்கின்ற கனவுகளில் உன்
தோழமை இல்லாது
நெடுந்தூர நாட்களிலே
நினைவுகளை இழந்தேனே!

சரமலர் கனவுகளை
சந்தித்து சொன்னவன் நீ
வைகறை வாசலிலே உன்
வரவிற்காய் காத்துள்ளேன்!
எங்கே நீ சென்றாயோ?
என் நினைவை மறந்தாயோ?
...................
 

முதுமை 

.....................................
பட்டினிச்சாவு!



ஐந்து பிள்ளைகள் 
அந்நிய நாட்டில்!
அன்னை தந்தையரோ
அகதிகளாய் தாய் நாட்டில்!

பட்டினியால் பெற்றோர் சாவு!
அறிந்ததுமே ஐவரும்
அடுத்த கணமே பறக்கின்றார்
அந்தியேட்டி செய்ய நாட்டிற்கு!

ஆயிரம் குடும்பங்களின்
வயிறு நிரம்பியது
பட்டினியால் மரணித்த 

பிள்ளைகள் செய்த புண்ணியத்தால்....
.......................................



பால்நிலா பெண்மயிலே!



வான் நிலா வெளிச்சம் 
பாலெனப் படர்ந்திருக்க
ஊமைக் கருக்கலிலே 
உட்கார்ந்திருக்கும் பெண்மயிலே!
வட்டமிட்டு சோகமொன்று
உன் மனதை வாட்டுறதோ?

துள்ளி ஓடும் நீரிலேயுன் 

வெள்ளி மலர்ப் பாதங்கள்!
பள்ளி கொள்ள மறந்தவுன்
நீள்விழி வட்டத்திலே
நீண்ட பொன் இமைகளினால்
நெய்யப் படுகின்றன சோகங்கள்!

காலையென மாலையென
கானகத்தில் காத்திருந்தும்
காதலன் வரவில்லையோடி?
மௌனத்தில் படுத்திருந்த உன்
மனத்தின் நினைவுகளை
கொன்றானோ களவாடி!

.....................


ஏக்கம்!



காத்திருந்த எந்தனுக்கு 
முகத்தைக் காட்டி விட்டு
முடிவைக் கூற மறுத்து 
மூன்றாம்பிறை நிலவாய் நீ 
தூரதேசம் சென்றதனால் என்
தூக்கப் பிரதேசம் தொடர்ந்து
கனவுகளால் தாக்கப்பட
விழிநீர் குளத்தில்
விழுந்து கரைந்தன
ஏக்க மிச்சங்கள்!


............................


ஓவியம்!




பிறைநிலா!



அதிசயம்!



.................................................................


யானையும் பூனையும்! 

பாய்ந்து வரும் அருவியிதை
தாகம் தீர்க்க யானையாரும்
பணிந்திருந்தே அருந்துவதை
பார்த்திங்கே ரசிக்கின்றாரே
பாவமிந்தப் பூனையாரும்!
.......................................



நீல நிலா!

வள்ளி மணாளன் வாகனமாம்
புள்ளி மயில் இதன் அழகைப் பார்!

புள்ளினங்களே வியக்கும் படி இறகில்
புள்ளிகளைக் கொண்ட புதுமையை பார்!

நிலத்தில் வாழும் நீல நிலாவோ!
மண்ணில் தோன்றிய மரகதச் சிற்பமோ!

கையில் வேல் எந்தியவனது
காலில் வீழ்ந்த கான மயிலோ! இல்லை

கதிர்களை வீசி மெல்ல அசைந்து
ஒளி தர வரும் காலைச் சூரியனோ!

வண்ண ஓவியம் இது ஆடுவதனால்
வானமும் மழை பொழிகிறதோ!  இல்லை இதன்

கார் கூந்தல் அவிழ்ந்தது கண்டு
கார் மேகம் கண்ணீர் வடிக்கிறதோ!
.................................


                    

கண்கள் நீயும் கலங்கிடலாமோ?

பாப இருட்டை பொசுக்கும்
கோப நிலாவே உன் சோகமென்ன?

வண்ண முகில் பூவே!
கண்கள் நீயும் கலங்கிடலாமோ?

உருண்டு ஓடும் பூப் பந்தே!
நிற்கின்றேன் உன் நேர் வந்தே!

வெள்ளை நிலாவை பிடித்து தாவென
பிள்ளை நிலாக்கள் அழுவதை கண்டேன்!

பிள்ளை நிலாவின் கண்ணீர் துளியை
உந்தன் வரவே துடைக்கிறது!

உந்தன் கண்களே நீரை வடித்தால்
எந்தப் பிள்ளை துடைக்கிறது?

உலகம் முழுவதும் உன் காலின் கீழ்!
உந்தன் உள்ளம் நொந்திடலாமோ?

வெள்ளை நிலாவே! வெள்ளி நிலாவே!!
கண்கள் நீயும் கலங்கிடலாமோ?
...............................................



ஆறாத் துயர்!

முத்து முத்தாக
முகத்தில் நீர் துளிகள் தெறிக்க
மூர்ச்சித்து நிற்கும் இவளுக்கு
மூண்ட துயர் என்னவோ!

அளவற்ற நீரை கண்கள்
ஆற் றொழுக்காய் வடிக்க
கருங் கூந்தல் -பசுந்
தென்னங் கீற்றானதன்  மாயமென்னவோ!

மங்கை இவள் முகத்தில்
நெடு வான் மேகங்கள்
நீர் கொண்டு எழுதிய
நீளமான கவி இதுவோ!

சற்று சோக முடன்
உற்று பார்க்கும் இவள்
ஆற்று நீரிலே மூழ்குவதால் இவளது
ஆறாத் துயர்  ஆற்றுப்படுகிறதோ!
............................


சொர்க்க வாசல்!
சொர்க்க வாசல் தேடிச் சென்ற
மங்கையிவள் விழிகளில் என்ன ஏக்கம்?
பட்டாடை அணிந்து
பட்டாம் பூச்சிபோல் சென்ற பாவையிவள்
அடுத்த பாதத்தை
எடுத்து வைக்க முடியாதவளாய்
பார்த்து நிற்பது யார் வருகைக்காய்?
......................................................


விழியில் என் துளி?

உயிர்க் காதலனை இழந்தாயா? இல்லை
 கனவுகள் தான் கலைந்தனவா?
விழி யிரண்டும் அனல் கக்க
வலக் கண்ணோரம் நீர் கசிய
எதற் கிந்தக் கோபமம்மா?
யார் தந்த சாபமம்மா?

கலங்காதே கண்மணியே!
காத்திரம்மா வந்து விடுவான்!
காத்திருப்பு உன் வாழ்வில் மட்டுமல்ல
என் வாழ்வில் மட்டுமல்ல!
எம்மவர் வாழ்விலுந்தான்
எத்தனையோ வகை வகையாய்......
...............................................




பிரிவுத் துயர்!

பகலை இரவு விழுங்கிய பின்பும்
விரும்பிய இதயங்கள்
விலகிட முடியாமல் தவிப்பது ஏனோ?
பிரிவுத் துயரை ஏற்க இருவரும்
பிரியப்படாததாலோ?
...........................

பாசத்தின் நினைவுகள்!

தாளம் பூவாய் என் வீட்டுத்
தாழ் வாரங்களிலும்
வாசம் வீசுகிறது உன்
பாசத்தின் நினைவுகள்!
.................

காகிதக் கப்பல்!

குமுறி எழும் பேரலைகளின் நடுவே
சிக்கித் தவிக்கும்
கரைசேராக் காகிதக் கப்பலானேன்
என்னை விட்டு நீ விலகிய நாள் முதலாய்!
..........................................


எதிர் நீச்சல்!
                             
                                                        நீரிலே எதிர் நீச்சலிட்டு
உனை  நனைத்து எமைச் சுமந்து 
பட்டுச் சிறகுகளைப்
பஞ்சு மெத்தையாக்கி
நீள் துயில் கொள்ள வைக்கும்
தாயே! இத் தரணியிலே
உனக்கு இணை யாருமுண்டோ!!!
..................

இடம் மாறும் இதயம்!

உனக்காக நான் எந்தன்
இதயத்தை தருகின்றேன்!
எனக்காக நீ உந்தன்  
இரக்கத்தை காட்டி விடு!
.......................



ஏமாற்றம்!

வானக் கதவைத் தட்டி விட்டு
மறைந்து செல்லும் மின்னலைப் போல்
உன் வரவை எதிர் பார்த்திருக்கும் என் விழிகள்!

இமைக் கதவைத் திறந்து
எட்டி எட்டிப் பார்த்து ஏமாந்து போனதனால்
மீண்டும் தம்மை சிறைப் படுத்திக்கொள்கின்றன!

உன் வரவிற்காய் ஏங்கிய என் விழிகளில்
தேங்கிய கண்ணீரில் உப்புக் கரிக்கிறதே!
அது அலை எனப் பாய்கையில் என் ஆடையும் நனைகிறதே!
................................................


மலரில் வண்டு.

நறுமண மலரை சுவைக்கும் வண்டு
அது வாடிய பின்னர்
பிறிதொரு மலரை நாடுவது ஏனோ....?
....................


சொர்க்கமே என் பக்கத்தில்!

உந்தன் மேனியில் சாய்கையிலே
நான் பாடிப் பறக்கின்ற தேனீ! சொர்க்கம்
 நீயெந்தன் அருகினில் இருக்கையிலே
என் வெட்கமோ வெகு தூரத்தில்!

என் வெட்கச் சிரிப்பைப் பார்ப்பதற்காய்
ஏழை போல் பார்த்திருந்து நீ
ஏங்கித் தடுமாறுகின்ற போதெல்லாம்
வெள்ளலைகளாய் என்னுள்ளம் துள்ளிக் குதிக்கும்!
..............................................



இதயம்  இரண்டானது!

ஒன்றாக இருந்த இதயம்
இன்று இரண்டானது!
ஒன்றாக நாம் அன்று
இணைந்ததனாலே!
.......................



ஏக்கம்!

வெண் ணிலா ஒளியும்- மெல்ல
வீசிடும் தென்றல் காற்றும்- என்
நெஞ்சத்திலே நிறைந் திருக்கும்-அந்த
வஞ்சி மலரைத் தினம் எண்ணியே ஏங்க வைக்கும்!

கன்னி யவள் அழகைக் காண
காளை என் மனமும் ஏங்கி வாடும்!
ஆவலை வெளிக் காட்டாமல் அடக்கி   வைத்தால்
தீக்கிரை யாதல் போல் என்னுள்ளம் ஆகி விடும்!

என் நெஞ்ச மதில் நிறைந்துள்ள -அந்தி
மஞ்சள் முகத்தவள் வருகையை
எதிர் பார்த்து ஏங்குகின்றேன்!
மனம் வாடுகின்றேன்!
..................................

மிக்க நன்றி என் இனிய உறவுகளே!
 புதிய காட்சிகளை ரசிப்பதற்கும்
புதுக்  கவிதைகளை ருசிப்பதற்கும்
மீண்டும் மீண்டும் வாருங்கள்! 
...................................