என் கவிகள்!



என் கவிகள்!!!

புதுக் கவிதை எனும் பெயரில்
உண்மைகளுடன் கூடவே கொஞ்சம்
வர்ணக் கற்பனைகளையும் உட்புகுத்தி
 நான் வரைந்த ஓவியங்கள்!

விடியாத இரவுகளில்
விழிக் கதவைத் திறந்து வைத்து
  வாராத உண்மைகளை வரவழைத்து
நான் படைத்த  நல்ல தமிழ் காவியங்கள்!

என் உள்ளத்துள் உறங்கிக் கிடந்த
மௌன சப்தங்களின் மொழி பெயர்ப்புக்கள்!
தமிழோடு நான் செய்த
சமாதான உடன்படிக்கையின் சாட்சியங்கள்!

பிரசவத் தாயைப் போல்
விருப்பத்தோடு வேதனையை அனுபவித்து
ஆசையோடு நான் பெற்றெடுத்த
இலக்கியக் குழந்தைகள்!

காதல், சமூகம், நாடு இவை
என் எழுத்துக்குக் கருக் கொடுத்ததால்
நான் பெற்றெடுத்த
 உயிர் முத்துக்கள்!

கட்டித் தமிழுக்கு பட்டுத் துகில் கொடுக்கும்
பாவலர் மத்தியில்
சிட்டாய் நான் பாடும்
மெட்டுப் பாடல்கள் இவை!

காட்டு மூங்கில்கள் கலைச் சிற்பியால்
கானப் புல்லாங்குழல் ஆவதைப் போல்
என் சிந்தனைகளை கவிச் சுவை கலந்து
நான் உருவாக்கிய   சிற்பங்கள்!

என் தமிழில் பிழை இருப்பின்
மேன் மக்களே!
பொறுத்தருள வேண்டுகின்றேன்!


நன்றி.
வணக்கம்.
                                               அன்புடன். பொன்மகள்.